Posted by: gmohanraj on: 12/02/2009
சென்னை: கனடாவில் அந்நாட்டு காவல் துறையினர் தனக்கு கைவிலங்கு மாட்டி துன்புறுத்தி, அவமானப்படுத்தியாதாக இயக்குனர் சீமான் புகார் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்தன்று உரையாற்றுவதற்காக கனடா சென்றிருந்த ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவரும், பிரபல இயக்குனருமான சீமான் அந்நாட்டின் டொராண்டோ நகரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார்.
இறையாண்மைக்கு எதிராகப் பேசவில்லை என்று சீமான் வாதிட்டாலும், கனடிய சட்டப்படி பிரிவினையைத் தூண்டும் செயலாகவே அவரது பேச்சு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார் கனடா போலீசாரால். விசாரணைக்குப் பிறகு கனடாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.
பக்குவமற்ற அணுகுமுறை
‘சீமான் போன்றவர்கள் வெளிநாடுகளில் உள்ள நடைமுறைகளைப் புரிந்து கொண்டு, தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்து கொண்டு பேச வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசி குடியேறிய நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளைக் கிளப்பிவிடக் கூடாது. வெறும் உணர்ச்சிவசப்படுவதால் மட்டும் இப்போது ஏதும் நிகழ்ந்து விடப்போவதில்லை. இந்த அனுபவம் அவருக்கு பின்னாளில் உதவும்’, என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒருவர் பின்னர் கருத்து தெரிவித்திருந்தார்.
நடந்தது என்ன?
இதற்கிடையே விசாரணையின் போது நடந்தது என்ன என்பது குறித்து இப்போது சீமான் விளக்கியுள்ளார்.
விசாரணை அதிகாரிகள் தன்னைத் துன்புறுத்தியதாகவும், தன்னுடைய கைகளில் விலங்கிட்டு சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு காரில் அழைத்துச்சென்று பல மணி நேரம் சம்பந்தமில்லாத பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்ததாகவும், புலிகள் ஆதரவு பேச்சுக்காக இந்தியாவில் எதிரப்கொண்ட வழக்குகள் எத்தனை என்பது குறித்தும் விசாரித்ததாக சீமான் கூறினார்.
இந்திய – சிங்கள அதிகாரிகளே காரணம்!
மேலும் அவர் கூறுகையில், “இதுபோன்ற மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சாமல் ஈழத் தமிழர்களுக்கு தனித் தாய்நாடு உருவாகும் வரை புலிகளையும், ஈழத்தமிழர்களையும் ஆதரித்து பேசுவேன்.
நவம்பர் 27ந் தேதி மான்ட்ரீல் நகரில் அனுசரிக்கப்பட இருந்த மாவீரர் தினத்தன்று என்னால் உரையாற்ற முடியாமல் போனது வருத்தமாக உள்ளது. சிவில் உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் கனடா நாட்டில் கூட தமிழனுக்கு பேச்சுரிமை மறுக்கப்பட்டது வேதனை அளிக்கிறது.
என்னை கைது செய்த கனடா அதிகாரிகள் இன்டர்போல் போலீசார் என்னை விசாரிப்பார்கள் என்று தெரிவித்தனர். அதன் பிறகு ஒரு சீக்கிய அதிகாரி வந்து என்னிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார். ஆனால் கடைசி வரை அவர் தன்னை யார் என்றே என்னிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. கனடாவில் இருந்துதான் திருப்பி அனுப்பப்பட்டதற்கு இந்திய அதிகாரிகளும், சிங்கள அதிகாரிகளும்தான் காரணம்” என்றார் சீமான்.
உதவி இயக்குநர் கைது!
இந்நிலையில், சீமானின் உதவி இயக்குநர் மித்ரன் என்பவரை இன்று போலீசார் சென்னையில் கைது செய்தனர். பிரபாகரன் படத்தைக் கிழித்த இவிகேஎஸ் இளங்கோவன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் அவருக்கு தொடர்புள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீமான் இயக்கத்தைச் சேர்ந்த மேலும் இருவரும் கூட இந்த வழக்கில் கைதாகியுள்ளனர்.
இவர்களிடம் விசாரித்ததில் மதுரை எஞ்ஜினியர் விஜயகுமார் என்பவர்தான் தங்களுக்கு பெட்ரோல் குண்டுகளைத் தயாரிக்க உதவியதாக கூறியுள்ளனர். நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இந்த விஜய்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.