Posted by: gmohanraj on: 12/02/2009
எல்லாம் தெரிந்த மனிதர்கள் செய்யும் தவறுகளில் முதலில் பாதிக்கப்படுவது ஒன்றுமே தெரியாத மனிதர்கள்தான் என்பார்கள்.
எய்ட்ஸ் நோய் பரவலுக்கு இந்த வழக்குச் சொல் முற்றுமுழுதாகப் பொருந்தும். மனிதர்களின் தவறுகளுக்கு முதல்பலியாக நிற்பது ஒன்றுமறியா பிஞ்சுக் குழந்தைகளோ.
அந்த பிஞ்சுகளைக் காப்பதில் மிகுந்த கவனத்தைச் செலுத்த வேண்டிய காலகட்டம் இது.
முதலில் இந்தக் கொடிய நோய் மழலைகளுக்குப் பரவும் வழிகளைத் தெரிந்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லோராலும் முடியக்கூடிய காரியம்தான் இது. தாம் பெற்ற குழந்தைகள் மீதுதான் இந்த அதிகபட்ச கவனம் இருக்க வேண்டும் என்றில்லை… அடுத்தவர் குழந்தையும் மழலைதான். ஒன்றுமறியா பிஞ்சுகள்தான். அந்தக் குழந்தைகளுக்கு எந்த விதத்திலும் கொடிய நோய்க்கிருமிகள் தாக்க யாரும் காரணமாக இல்லாமல் இருந்தால் போதும். குறிப்பாக மருத்துவமனைகள் இதனை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
இந்த விழிப்புணர்வை உலகமெங்கும் பரப்பும் முயற்சியில் பலரும் இப்போது தீவிரமாக இறங்கியுள்ளனர். பிராட் பிட், ஏஞ்சலினா ஜுலி போன்ற பிரபலமான மனிதர்கள் இதற்கான முயற்சிகளில் உலகமெங்கும் ஆர்வத்தோடு களமிறங்கியுள்ளனர்.
இந்தியாவில் நடிகர் கமல்ஹாஸன் அதற்கான முயற்சிகளில் பல ஆண்டுகளாகவே ஈடுபட்டுள்ளார் என்பது பலரும் அறியாதது. கேன்சர் நோய் சிகிச்சை, முன்தடுப்பு முயற்சிகளில் அவர் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையுடன் ஏற்கெனவே இணைந்து செயல்படுகிறார். அதுமட்டுமல்ல, கேன்சர் சம்பந்தமான வழிகாட்டலுக்கு தனது கதவுகள் எப்போதும் திறந்திருப்பதாகவும் தனது இரு நெருங்கிய நண்பர்களை கேசன்சருக்கு பலிகொடுத்ததால் அதுபற்றி தனக்கு ஓரளவு தெரியும் என்று பொதுமேடையில் அறிவித்தவர் கமல்.
இப்போது எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு குறித்த பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்
ஒரு பகுதியாக உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி 1000 குழந்தைகளை தத்தெடுக்கிறார் நடிகர் கமல் ஹாசன்.
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எய்ட்ஸ் நோய் எளிதில் தாக்குவது குழந்தைகளைத்தான்.
நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் மட்டும் எய்ட்ஸ் நோய் அதிகமான குழந்தைகளைப் பாதித்துள்ளது. சுகாதாரத்துறையின் புள்ளிவிவரப்படி தமிழகத்தில் 2,651 குழந்தைகள் இந்த ஆண்டு புதிதாக எய்ட்ஸ் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.
இன்று (டிசம்பர் 1) உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நடிகர் கமல்ஹாசன் எய்ட்ஸ் பாதித்த ஆயிரம் குழந்தைகளை தத்து எடுப்பதாக அறிவித்துள்ளார்.
இதுபற்றி கமல் பேசுகையில், “குழந்தைகள்தான் நமது எதிர்காலம். ஆனால் அவர்களில் சிலர் நம்பிக்கையின்மையின் பிடியில் சிக்கி இருப்பது கவலை அளிக்கிறது.
அவர்களுக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிப்பது நமது கடமை, பொறுப்பு. என்னை பின்பற்றி பலரும் இந்த சேவையை செய்வார்கள் என்று நம்புகிறேன்.
என்னை விட சிறந்தவர்களும், வசதியானவர்களும் இருக்கிறார்கள். நான் ஒரு இயக்கத்தை மட்டுமே தொடங்கி இருக்கிறேன் மற்றவர்கள் இதை முன்னெடுத்து செல்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
வெல்டன் கமல்!